தொகுப்பு : அ.உமர் பாரூக்
"உழைப்பது, உழைப்பின்வழியே அன்புசெய்வது, சுதந்திர உணர்வுகளை உள்வாங்கி மனிதகுலம் வகுத்துத்தந்த அறக்கோட்பாடுகளுக்கு எதிராகச் செயல்படுபவர்களை எதிர்த்து நிற்பது என்பதே உழைப்புசார்ந்த எனது வாழ்க்கை கற்றுத்தந்த அனுபவப்பாடம். எனது எல்லாப்படைப்புக்களிலும் இந்த நியதி பதிவாகியிருக்கிறது. உழைப்பு தான் வாழ்க்கையை அர்த்தப்படுத்துகிறது என்றுநான் சொல்வேன். எனது வாழ்வியல் செய்தியாகவும் இந்த சமுதாயத்துக்குப் பிரகடனப்படுத்துகிறேன்" என்று சொல்லும் எழுத்தாளர் தேனி சீருடையான் 1980 களிலிருந்து தொடர்ந்து எழுதிவரும் இலக்கிய ஆளுமை.
![]() |
தேனி சீருடையான் |
கருப்பையா எனும் இயற்பெயர் கொண்ட தேனி சீருடையான் வசிப்பது தேனி நகரில். அவர் தன்னுடைய ஏழாவது வயதில் பார்வையை இழந்து, அதன் பிறகு சென்னை பூந்தமல்லியிலுள்ள பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளியில் தனது கல்வியைத் தொடர்ந்தார். பிரெய்லி முறையில் பத்தாம் வகுப்பு வரை பயின்ற சீருடையான் தனது இருபதாவது வயதில் அறுவை சிகிச்சை மூலம் பார்வை பெற்றார். எளிய குடும்பமும், உணவின்றி தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கான பொருளாதாரப் பின்னணியும் கொண்ட இளமைக்காலம் அவருடையது. பார்வை பெற்ற பிறகு, பார்வையற்றோருக்கான அரசின் சலுகைகளும் கிடைக்காமல் போகவே வறுமையோடு போராடும் வாழ்க்கையே தொடர்ந்தது. தந்தையின் கூலித் தொழிலைத் தொடர முயன்று, சாலையோர தள்ளுவண்டிக் கடையில் பழ வியாபாரத்தைத் துவங்கினார் சீருடையான். இப்போது பெரியகுளம் சாலையில் ஒரு பழக்கடை நடத்தி வருகிறார். உழைப்பின் மூலம் வறுமையை வெற்றி கொண்ட அவர், குடும்பத்தோடு தேனி காட்டுச் சாலை பகுதியில் வசிக்கிறார்.
ஆறாம் வகுப்பிலும், ஒன்பதாம் வகுப்பிலும் துவங்கிய கவிதை முயற்சிகள் 1972 ஆம் ஆண்டில் ”விரக்தி” எனும் கவிதை ’கணையாழி’ இதழில் பிரசுரமானதில் வெற்றியடைந்தது. தொடர்ந்து ஞானரதம், செம்மலர், வானம்பாடி . . . என பல இலக்கிய இதழ்களில் கவிதைகள் எழுதி வந்தார் சீருடையான். பத்திரிகையாளர் பொன் விஜயன் அவர்களின் தூண்டுதலால் சிறுகதை வாசிப்பில் கவனம் திரும்பியதாகக் குறிப்பிடும் அவர், கந்தர்வன், ஜெயந்தன் ஆகிய எழுத்தாளர்களின் படைப்பில் ஈர்க்கப்பட்டதாகப் பதிவு செய்துள்ளார். ”புதிய நம்பிக்கை” இதழில் சீருடையானின் முதல் சிறுகதை பிரசுரமானது.
1991 ஆம் ஆண்டில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அறிவித்த நாவல் போட்டியில் பங்கேற்று, மூன்றாம் பரிசினைப் பெற்றது சீருடையானின் “கடை” நாவல். தொடர்ந்து இலக்கிய இதழ்களில் சிறுகதைகளையும், இலக்கியத் திறனாய்வுக் கட்டுரைகளையும் எழுதிவரும் சீருடையானின் நாவல்களில் “நிறங்களின் உலகம்” மிக முக்கியமான படைப்பு. பார்வையற்றவர்களின் உலகத்தை தமிழில் பதிவு செய்த முதல் நாவல்.
சீருடையானின் கதைக்களம் எளிய மக்களின் வாழ்வியல் கூறுகளைப் பிரதிபலிப்பதாக அமைந்திருக்கும். எளிய மொழி, தத்துவ அடிப்படையிலான உள்ளடக்கம், தேனி மாவட்ட வட்டார வழக்கு என்பதே அனைத்துப் படைப்புகளின் வரைவிலக்கணமாக அமைந்திருக்கின்றன.
தேனி சீருடையானின் படைப்புகளை ஆய்வு செய்து எழுத்தாளர் கரிச்சிராம்பாரதி (ராமகிருஷ்ணன்) மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். திருப்பூர் கலைக்கல்லூரி பேராசிரியர் கந்தசாமி "நிறங்களின் உலகம்" வழியே மாற்றுத் திறனாளிகள் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்.
கோவில்பட்டியைச் சேர்ந்த ஆசிரியை தாயம்மா சீருடையானின் சிறுகதைகளை ஆய்வு செய்து ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றிருக்கிறார். காந்தி கிராமியப் பல்கலைக் கழக மாணவி சுலோச்சனா மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த மாணவி வெங்கட் ரமணி ஆகியோர் தங்களது தமிழிலக்கிய பட்டப்படிப்பின் திட்ட அறிக்கைக்காக சீருடையானின் சிறுகதைகளை ஆய்வு செய்துள்ளனர்.
சீருடையானின் படைப்புகள் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பாடமாக உள்ளது. அய்.தமிழ் மணியின் இயக்கத்தில் தேனி சீருடையான் குறித்த ஆவணப்படம் “தனித்த பறவை” உருவாக்கப்பட்டுள்ளது.
தேனி சீருடையானின் படைப்புலகம் எனும் குறு நூலினை கலைஞன் பதிப்பகம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தோடு இணைந்து வெளியிட்டிருக்கிறது. தமுஎகச அறம் கிளை பாரதி புத்தகாலயத்தோடு இணைந்து சீருடையானின் நேர்காணலை தனி நூலாக வெளியிட்டிருக்கிறது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தில் மாவட்டப் பொறுப்புகளிலும், மாநில செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றி, தற்போது மாநிலக்குழு உறுப்பினராக அங்கம் வகிக்கிறார் தேனி சீருடையான்.
தேனி சீருடையானின் படைப்புகள்
நாவல்கள்
1. கடை
2. நிறங்களின்
உலகம்
3. சிறகுகள்
முறியவில்லை
4. நாகராணியின்
முற்றம்
சிறுகதைத் தொகுப்புகள்
1. ஆகவே
2. ஒரே
வாசல்
3. விழுது
4. பயணம்
5. மான்மேயும்
காடு
6. கந்துக்காரன்
கூண்டு
7. பாதகத்தி
கட்டுரை
1. சிறுகதை பாதையும், பயணமும்
பெற்ற விருதுகளும், பரிசுகளும்
✪ இளைஞர்
முழக்கம் சிறுகதைப் போட்டி – முதல் பரிசு 1983
✪ இலக்கிய
வீதி சிறுகதைப் போட்டி – முதல் பரிசு 1985
✪ தமுஎச
சிறுகதைப் போட்டி – இரண்டாவது பரிசு 1987
✪ தமுஎச நாவல் போட்டி – மூன்றாம் பரிசு 1991
✪ ஜோதி
விநாயகம் நினைவுப் பரிசு – 1999
✪ ஆதித்தனார்
இலக்கிய விருது - 1999
✪ கலை
இலக்கியப் பெருமன்ற நாவல் போட்டி – 2008
✪ கு.சின்னப்ப
பாரதி அறக்கட்டளை விருது – 2010
✪ எஸ்.ஆர்.வி.
பள்ளி படைப்பூக்க விருது – 2010
✪ கவின்
முகில் அறக்கட்டளை நாவல் விருது – 2013
✪ மதுரை
தமிழ்ச் சங்க விருது 2014
✪ உலகத்
தமிழ்ப் பல்கலைக்கழகம், அமெரிக்கா சிறந்த நூலுக்கான விருது – 2017
இணைய இணைப்புகள்
தேனி சீருடையான் குறித்த தினமலர் கட்டுரை
பிக் பாஸ் நிகழ்வில் “நிறங்களின் உலகம்”